Saturday 28 July 2018

நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன்


[நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற தலைப்பில் சென்ற வருட ஈரோடு புத்தக திருவிழாவில் எடிட்டரை பற்றி நான் பேச உத்தேசித்து இருந்த பொருளடக்கம் சிறிது மாறுதல்களுடன் ...இவ்வருடம் நான் கலந்து கொள்ள இயலாது என்பதால் ]

நண்பர்களுக்கு வணக்கம் !

காமிக்ஸ் வானின் நட்சத்திரங்களாகிய காமிரேடுகள்  நாற்காலியில் எதிரே வீற்று இருக்க மின்மினிபூச்சியாகிய யான் மேடையேறி பேசுவது என்பது  நகைமுரணே.

இங்கு நடைபெறும் விழாவின் கோலாகலங்கள் பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா வர்ணனைகளை நினைவூட்டுகின்றன ..

ஈரோடு விஜய் உள்ளிட்ட வரவேற்பு குழுவினர் நெடும் தொலைவில் இருந்து வரும் நண்பர்களை புன்னகை என்னும் நறுமணம் சுமந்து காமிக்ஸ் வாசகர்கள் அல்லாத பொது மாந்தர்கள் மத்தியில் நீந்தி வரவேற்பது
  அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும்
என்ற வரிகளை நினைவூட்டுகிறது .

நெடுநாள் பிரிவுக்கு பின் தலைவி அகில் நறுமணம் கமழும் கூந்தலுடன் மேகத்தில் நுழைந்த முழுமதி போல் நின்று தலைவனை வரவேற்கிறாளாம்.

ஆகஸ்ட் மாதம் காமிக்ஸ் ஏதுமில்லை என நோயுற்று இருக்கும் வாசகர்களின் நிலை அறிவோம் ..

இந்நிலைக்கு மருந்துதான் என்ன ?

அவள் தந்த நோய்க்கு அவளே மருந்து என்றார் வள்ளுவர் ..

  ’பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை
 தன்நோய்க்குத் தானே மருந்து.

என சொன்னார் ..

ஆகஸ்ட் மாத காமிக்ஸ் நோய்க்கு மருந்தாக மகோன்னத புகழுற்ற இரத்தப்படலம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்பட போகிறது ..
அதுசரி ..காமிக்சால் ஏற்பட்ட நோய்க்கு காமிக்ஸ்தானே மருந்தாக இருக்கமுடியும் . 


 விழா சிறப்புற நடைபெறுகிறது எனினும் அதன் நாயகனை பாராட்டவே இங்கு வந்தேன்..

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காமிக்ஸ் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சு நுணுக்கங்கள் பற்றி அறிந்த ஆசிரியரை பாராட்ட இந்த மூடமதியாளனுக்கு என்ன தகுதி உள்ளது ?

ஷெனாய் வாத்திய கருவிக்கு பதிலாக சில்வண்டின் ரீங்காரம் இசையாகுமா என்ற கேள்வி இங்கிருக்கும் பலர் மனதில் எழலாம் ..

   ஞானத்தால் தொழுவர் சில ஞானியர்  
    ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்                      
   ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு                            
   ஞானத்தால் உனை நானும் தொழுவனே!”  என்பது அப்பர் வாக்கு.


காமிக்ஸ் பற்றிய அறிவால் யாம் இங்கு ஆசிரியரை பாராட்ட வரவில்லை .
காமிக்ஸ் பற்றி அறிந்த நல்லோர் ஆசிரியரை பாராட்டுவது கண்டு அதன்மூலம் பெற்ற அறிவால் இங்கு யாம் ஆசிரியரை பாராட்ட வந்ததாக அறிக . 

நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகர் என்ற தலைப்பெடுத்து ஆசிரியர் பற்றி பேச இவ்விடம் வந்தேன் ..

நான்கு கோடியா ?

கணக்கில் ஏற்பட்டு இருக்கும் இப்பிழை பேசுபவர் மூப்பினால் வந்ததா?
அல்லது கைப்பேசி கால்குலேட்டர் ஆப்பினால் வந்ததா ?
என சிலர் எண்ணக்கூடும் .

எனது கணக்கு சரிதான் என நிரூபிக்க கையோடு ஒரு பாட்டியை கூட்டி வந்திருக்கிறேன்..

பாட்டி என்றவுடன் ஆசிரியர் அச்சமுற வேண்டாம்

இவர் அடுத்தவர் பையில் கைவிடும் ஐரோப்பிய பாட்டி அல்ல
அனைவருக்கும் அறிமுகமான அவ்வைப்பாட்டி .


சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்;
 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
 
உண்ணாமை கோடி பெறும்;
 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
 
கூடுதல் கோடி பெறும்;
 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
 
கோடாமை கோடி பெறும்.


என்பதே அப்பாடல்.


இப்பாடலில் ஒவ்வொரு ஈரடியும் ஒரு கோடி பாடலுக்கான உண்மையை உணர்த்துவதாக புரிந்துகொள்வது சுலபம் ..

இதற்கும் ஆசிரியர்க்கும் என்ன தொடர்பு ?

தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்ட காலத்தை ;;இருண்ட காலம் ‘’ என அழைப்பர் 
.
லயன்முத்துவின் வரலாற்றிலும் அப்படிப்பட்ட இருண்ட காலம் வரத்தான் செய்தது ..

களப்பிரர் ஆண்ட சமயம் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை ..

அதே போல் 2010- 2012 வரை தமிழ் காமிக்ஸ் உலகில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலோர் அறிந்திலர்...

2012 கம்பேக் –க்கு பிறகு இதழ்கள் சீராக வெளிவரத் துவங்கின ..

கிரகணம் பீடித்த நிலையில் இருந்து கதிரவனாய் லயன்முத்து பிரகாசிக்க துவங்கியது..

ஆயினும் பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது ...

இவரால் இப்படி தொடர முடியுமா ?

புதிய தலைமுறை சவால்களை ஆசிரியரால் சந்திக்க இயலுமா /

தமிழ் காமிக்ஸ் வானை சந்தேக மேகங்கள் சூழ்ந்து இருந்தன..

இச்சூழ்நிலையில்தான் நெவர் பிபோர் ஸ்பெஷல்- ஐ ஆசிரியர் வெளியிட்டார் .

வாசகர்கள் மத்தியில் அளவற்ற குதூகலத்தையும் ஆசிரியர் மாட்டு பெரும் 

நம்பிக்கையையும் தோற்றுவித்த NBS அக்காலகட்டத்தில் ஒரு கோடி காமிக்ஸ்

வெளியிட்டதற்கு சமமாகும்...


  நிலைக்குமா இவ்வாழ்வு என்ற நெஞ்சின் கலக்கத்தை
  குலைத்திட்ட என் பிஎஸ் கோடி பெறும்.


 சந்தேக மேகங்களை சண்ட மாருதமாய் வந்து NBS விரட்டியடித்தது என்றால் அது மிகையான கூற்று அல்ல ...


ஒரு நிலையை அடைந்தபின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வதும் அடைந்த நிலையை தக்க வைத்து கொள்வதும் எளிய விஷயமல்ல..


கடின உழைப்பினால் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்தார் ஆசிரியர் .
.
லயன் மேக்னம் – வெளியிட்டார்
 .
இச்சையுடன் எதிர்பார்த்தோம்;இருகரத்தில் ஏந்தி களித்தோம்

லஜ்ஜையின்றி சொல்வேன் லயன் மேக்னம் கோடி பெறும்...

பின்னர் நடைபெற்றதோ பெருமுயற்சி ....

தமிழ் காமிக்ஸ் வளர்ச்சியின் பாயிரம் என ஆயிரம் ரூபாயில் வெளிவந்தது மின்னும் மரணம் .

பதிப்பக உலகின் ஜாம்பவான்கள் கண்களின் புருவங்களை உயர்த்தியது ..

தின்னுமது இதயத்தை ; திரும்பி பார் பார்க்கும்

மின்னும் மரணம் மற்றுமோர் கோடி பெறும்..

தொடர்வதோ சொற்களில் அடக்க இயலா விந்தை......


உள்அகம் நறுந்தாது உறைப்ப மீதுஅழிந்து

கள்உக நடுங்கும் கழுநீர் போல ....


தன்னுள்ளே உள்ள தாதுக்கள் ஊறி இருத்தலால் மேலேயிருக்கும் கட்டு அவிழ்ந்து தேன் சொரியும் கழுநீர் பூவை போல ஆகிவிட்டார் ஆசிரியர் ...

ஆசிரியர் உள்ளே எப்போதும் ஊறி கொண்டே இருக்கும் சித்திரக்கதைகள்  மீதான பிரேமம் பல இக்கட்டுகளையும் அவிழ்த்து காமிக்ஸ் என்னும் தேன்தனை சொரிய செய்துகொண்டுதான் இருக்கிறது .


இதற்கு சமீபத்திய உதாரணம் இதோ வெளிவரப்போகும் ரத்தப்படலம் வண்ணப்பதிப்பு.

சத்தம் போட்டு சொல்வேன் சந்தோஷ பறையொலிக்க

இரத்தப்படலம் சத்தியமாய் கோடி பெறும் ....

ஆக நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற எமது தலைப்பு உங்களுக்கு விளங்கியிருக்கும் ..

ஆசிரியர் வெளியிட்ட மற்றவையெல்லாம் ? என்ற சிந்தனை தோன்ற வேண்டுவதில்லை ...
நவரத்ன புதையலில் உயர்வென்ன / தாழ்வென்ன ?

தகுந்த காலத்தே செய்யப்பட்டவை என்பதாலும் சில கூடுதல் சிறப்பம்சங்களாலும் இவை நான்கும் சுட்டி காட்டப்பட்டன ..

தை மாதம் நதி நீராடும் பாவை நோன்பு பாடல் ஒன்றை சொல்லி உரையை நிறைவு 

செய்கிறேன்

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,

விழுத் தகை பெறுக!என வேண்டுதும்’ ..

...........................................................................

............................................................................

 மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” 



எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். 

...............................................................................


இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற

 வேண்டும்.

ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் உள்ள இப்பந்தம் என்றும் பிரியாது இருக்கவேண்டும் .

மனதளவில் இளமையுள்ளவராய் என்றும் ஆசிரியர் வெளியிடும் காமிக்ஸ் வாசித்து மகிழ்ந்து

இதுபோல் எண்ணற்ற  புத்தக வாசக சங்கம விழாக்கள் என்றென்றும் நடைபெற வேண்டும் என

        வேண்டி விடைபெறுகிறேன்   
   
            
    

2 comments: